திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சேலம் பாசஞ்சர் ரயில்கள் சேவை நீட்டிப்பு

திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சேலம் பாசஞ்சர் ரயில்கள் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-02 08:30 GMT

விழுப்புரம், திருச்சி, சேலம் உள்ளிட்ட கோட்டங்களிலிருந்து இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சேவைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

இது குறித்து தெற்கு ரயில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- விழுப்புரத்திலிருந்து மாலை 6.25க்கு புறப்பட்டு இரவு 9.20க்கு மயிலாடுதுறை வரை சென்று சேரும் வண்டி எண் 06877 எனும் பாசஞ்சர் ரயில், இன்று முதல் (மே 2) பேரளம், பூந்தோட்டம், நன்னிலம் வழியாக இரவு 10.45க்கு திருவாரூர் வரை இயக்கப்படும்.

அதேபோல திருவாரூரிலிருந்து அதிகாலை 5.10க்கு புறப்படும் வண்டி எண் 06690 கொண்ட பாசஞ்சர் ரயில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறைக்கும், காலை 9.15க்கு விழுப்புரத்திற்கும் வந்து சேரும். திருச்சியிலிருந்து விருத்தாசலத்திற்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் சேவையும் இன்று முதல் விழுப்புரம் வரை நீட்டிக்கப்படுகிறது. வண்டி எண் 06892 எனும் பாசஞ்சர் ரயில் தினசரி திருச்சியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் சென்று சேர்கிறது. இந்த ரயில் இன்று முதல் விருத்தாசலத்துடன் நிற்காமல், உளுந்தூர்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய்நல்லூர் ரோடு வழியாக இரவு 10.30 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.

மறுமார்க்கமாக வண்டி எண் 06891 எனும் பாசஞ்சர் ரயில் நாளை (மே 3) முதல் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5.10க்கு புறப்பட்டு 6 மணியளவில் விருத்தாசலத்திற்கும், அங்கிருந்து காலை 9 மணிக்கு திருச்சிக்கும் வந்து சேரும். இது தவிர சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை தினசரி இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், இனி கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்படும். வண்டி எண் 06122 எனும் பாசஞ்சர் ரயில் தினமும் சேலத்திலிருந்து மாலை 6.20க்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு விருத்தாசலம் வந்தடைகிறது. இந்த ரயில் இன்று முதல் உத்தங்கல் மங்கலம், நெய்வேலி, வடலுர், குறிஞ்சிப்பாடி என இரவு 10.25க்கு கடலூர் துறைமுகம் ஜங்ஷனுக்கு வந்து சேரும்.

மறுமார்க்கமாக வண்டி எண் 06121 எனும் பாசஞ்சர் ரயில் நாளை முதல் அதிகாலை 5 மணிக்கு கடலூர் துறைமுகம் ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு, காலை 6.15க்கு விருத்தாசலத்திற்கும் காலை 9.05 மணிக்கு சேலம் ரயில் நிலையத்திற்கும் வந்து சேரும். மற்றுமொரு ரயில் சேவையும் இதேபோல நீட்டிக்கப்பட்டிருக்கிறது. திருச்சிலிருந்து தஞ்சாவூர் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் இனி திருவாரூர் வரை நீட்டிக்கப்படும். வண்டி எண் 06876 எனும் பாசஞ்சர் ரயில் தினசரி இரவு 8.28 மணிக்கு திருச்சிலிருந்து புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு தஞ்சாவூர் வரும். இந்த ரயில், இன்று முதல் சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக இரவு 11.05 மணிக்கு திருவாரூர் சென்று சேரும்.

மறுமார்க்கமாக வண்டி எண் 06871 எனும் பாசஞ்சர் ரயில் நாளை முதல் அதிகாலை 4.45 மணிக்கு திருவாரூரிலிருந்த புறப்பட்டு, காலை 5.45க்கு தஞ்சாவூருக்கும் காலை 7 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கும் வந்து சேரும். அதேபோல திருத்துறைப்பூண்டியிலிருந்து வாரத்திற்கு 5 நாட்கள் அகஸ்தியம்பள்ளிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், இனி திருவாரூர் வரை நீட்டிக்கப்படும். இந்த சேவை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும் திருவாரூரிலிருந்து வாரத்திற்கு 5 நாட்கள் என பட்டுக்கோட்டைக்கு பாசஞ்சர் ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் சேவைகள் நீட்டிப்பு குறித்து ஏற்கெனவே அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று முதல் ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன.

Tags:    

Similar News