/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி தினங்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து
X

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி தினங்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திகழ்கிறது. இங்கு ஈசன் மலை உருவில் ஜோதி வடிவிலேயே அருள் பாவித்து வருகின்றார். இத்திருகோயிலுக்கு மாதந்தோறும் பௌர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியின் அருள் பெற்று செல்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு மாற்றங்களையும், புதிய வசதிகளையும் ஏற்படுத்தி செம்மையாக செயல்படுத்தி வருகிறது.

இக்கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தந்திடும் வகையில் கோவில் நிர்வாகமானது மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

2023-24 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளின்படி, கிரிவலப் பாதையில் புகழ்பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாதங்கள் பக்தர்களுக்கு கிடைத்திடும் வகையில் பிரசாத கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

திருவண்ணாமலைக்கு விழா காலங்கள் மற்றும் பௌர்ணமி நாட்களில் வருகை தரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தந்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு ரயில்களை இயக்கிட மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் தென்னக ரயில்வேக்கு கருத்துருக்களை அனுப்பி நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ, 50-ன் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பொது தரிசனம் மட்டுமே என அறிவித்துள்ள நிலையில் கோவில் நிர்வாகம் அமர்வு தரிசனம் விஐபி தரிசனங்களையும் இன்றும் நாளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஆனி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பௌர்ணமி இன்று 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு தொடங்கி மறுநாள் 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது.

இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று வரும் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.

இதனால் இன்று பௌர்ணமியின் போது திருவண்ணாமலைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 2 July 2023 1:20 AM GMT

Related News