நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை
அதிமுக ஆட்சியில் மின் தடை இல்லை. திமுக எந்த தொலைநோக்கு திட்டத்தையும் நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை. நெல்லையில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்
HIGHLIGHTS
நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொன்னாக்குடி அடுத்த செங்குளம் தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசுகையில்:
தமிழக மக்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்தார். எடப்பாடி பழனிச்சாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா வகுத்து தந்த திட்டங்களை அடி பிறழாமல் மக்களுக்கு செய்து கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் மின் தடை இல்லை. ஆனால் 2006-2011ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சியில் மின் தடை பிரச்னையை அவர்களால் தீர்க்க முடியவில்லை.
எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டது. நில அபகரிப்பு நடைபெற்றது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நமது ஆட்சியில் யாரும் எந்த குறையும் சொல்ல முடியாத ஆட்சி. மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி என்ற சூழல் இருந்தது. ஆனால் சில கொள்கை முடிவு எடுத்ததால் நாம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம். திமுகவின் 505 பொய்யான வாக்குறுதிகளை நம்பி வெற்றி பெற செய்த மக்கள் இன்று அதன் பலனை அனுபவித்து வருகிறார்கள்.
நான் முதல்வராக வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலினும் அவரது மகனும் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் ரத்து செய்யவில்லை. எந்த தொலைநோக்கு திட்டத்தையும் நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை. செய்தித்தாளை பார்த்தால் எங்கு பார்த்தாலும் கொலை ,கொள்ளை, கற்பழிப்பு. பட்டப்பகலில் கல்லூரி மாணவி ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்படுகிறார். இது தான் திமுக ஆட்சி. இதை மாற்ற அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும். காவிரி பிரச்னையில் சட்டப் போராட்டம் நடத்தி இறுதி தீர்ப்பை பெற்று தந்தவர் ஜெயலலிதா தான். 2007ல் நடுவர் மன்ற தீர்ப்பு வந்தபோது கருணாநிதி முதல்வராக இருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி என்பதால் கருணாநிதி நினைத்திருந்தால் இறுதி தீர்ப்பு அரசாணை பெற்று தந்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.