போதை மாத்திரை விற்பனையா? தஞ்சை மருந்து கடைகளில் திடீர் சோதனை
போதை மாத்திரை விற்பனை செய்யப்படுகிறதா என, தஞ்சையில் உள்ள மருந்து கடைகளில் திடீர் சோதனை நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கஞ்சா,போதை பொருட்கள்,போதை சாக்லெட் போன்றவை விற்பனை அதிகளவில் உள்ளதை தடுக்கும் வகையில், போலீசார் பல்வேறு ஆய்வுகளை நடத்தி, குற்றவாளிகளை பிடித்து வருகின்றனர். பள்ளி,கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை பொருட்கள், சாக்லெட், மாத்திரைகளின் விற்பனையையும், அதற்கு காரணமாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கவும் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, தஞ்சாவூர் மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. பரத் சீனிவாசன், தஞ்சாவூர் சுகாதார ஆய்வாளர் விமல், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தலைமை காவலர் மகேஸ்வரி, போலீசார் செந்தில் குமார் ஆகியோர், தஞ்சவூரில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் போதை மாத்திரை விற்கப்படுகிறதா என ஆய்வு நடத்தினர். இதனால், அப்பகுதிகளில் சற்று பரபரப்பு நிலவியது.