தஞ்சாவூரில் மராட்டியர் காலத் தூக்கு மேடையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தஞ்சாவூரில் மராட்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த துாக்குமேடையை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
HIGHLIGHTS
தஞ்சாவூர் சேவப்பநாயக்கன் ஏரி மேல் கரையில், மராட்டிய மன்னர் காலத்து, 200 ஆண்டுகள் பழமையான துாக்கு மேடை உள்ளது. தரையிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் கலவை கட்டுமானத்தை கொண்டுள்ளது. 30 அடி அகலத்திலும் 200 அடி நீளத்திலும் கட்டப்பட்ட, இந்த துாக்குமேடை தற்போது மேற்கூரை ஏதும் இல்லாமல் வெறும் கட்டிடங்களோடு எஞ்சியுள்ளது.
இந்நிலையில் சிலர் இதை இடித்துவிட்டு, இந்த இடத்தை விற்க போவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியினர் திரண்டு கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகோயில் மீட்புக்குழு பொருளாளர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்; மராட்டிய மன்னர்கள் இந்த துாக்குமேடையை பயன்படுத்தியுள்ளனர். காலப்போக்கில் துாக்குமேடை பயன்படுத்தாமல் இருந்ததால், தற்போது கட்டுமானம் மட்டும் எஞ்சியுள்ளது. இந்நிலையில், திடீரென சிலர் இதனை எங்களுக்குரியது எனக்கூறி இடித்து அகற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதனை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். மேலும், இந்த இடத்தினை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, எஞ்சியுள்ள கட்டுமானத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.