நர்சரி பள்ளிகளை திறக்க கோரி ஆட்சியரிடம் மனு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி கேட்டு,தமிழ்நாடு நர்சரி,பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தினர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ்நாடு நர்சரி,பிரைமரி பள்ளிகள் நலச்சங்க ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் தயாளன் தலைமையில்,மாவட்ட தலைவர் சீனிவாசன்,வடக்கு மண்டல தலைவர் பிச்சாண்டி,மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாவட்ட இணை செயலாளர் பழனியப்பன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன்,பள்ளி தாளாளர்கள் வீரப்பன், இளையராஜா உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதாலும்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாலும், தமிழகத்தில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாணவ,மாணவிகளின் நலன் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை முதற்கட்டமாகவும்,எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு அடுத்த கட்டமாகவும் பள்ளிகளை திறக்க நெறிமுறைகளுடன் கூடிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும்.
மேலும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் குறிப்பாக மழலையர் பள்ளி ஆசிரியர்கள்,பணியாளர்கள் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.அவர்களின் துயர் போக்கும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.