விஜய் மக்கள் இயக்கம்: முன்னாள் நிர்வாகி மீது புகார்
விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் மீது அவதூறு பரப்பி வரும், முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட பொறுப்பாளரும், மாவட்ட தலைவருமான வாலாஜா பூக்கடை ஜி.மோகன் தலைமையில், செயலாளர் காந்திராஜ், மாவட்ட மாணவரணி சீ.தீனா, இளைஞரணி வினோத் ஆகியோர் முன்னிலையில், மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் புகார் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,
விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் இயக்கத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் மாநில தலைவர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியில் நீக்கப்பட்ட சென்னையை சேர்ந்த சி.ஜெயசீலன் என்பவர், மக்கள் இயக்கத்தின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொலைக்காட்சி செய்திக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள புஸ்ஸி தொகுதி முன்னாள் எம்எல்ஏ என்.ஆனந்த் என்பவர் மக்கள் இயக்குதிற்கு விரோதமாகவும், சாதி ரீதியாக செயல்படுவதாகவும் அவதூறு பரப்பி வருகிறார். மேலும் பொங்கல் பண்டிகை நாளில் வெளியான விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் ரூ.1000 க்கு டிக்கெட் விற்று அந்த பணத்தைக் கொண்டு மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை செய்து வருவதாகவும் பொய்யான தகவல்களை அளித்து விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளையும், விஜய் ரசிகர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மேற்படி அவதூறு பரப்பிவரும் முன்னாள் நிர்வாகியான சென்னையை சேர்ந்த சி. ஜெயசீலன் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.