முன்னாள் முதல்வர்கள் படம் திருப்பி மாட்டப்பட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு கூட்டரங்கில் முன்னாள் முதல்வர்கள் படம் திருப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிச்சாமி இன்று ஊராட்சி செயலாளர் லட்சுமி முன்னிலையில் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சியின் இயல்பு கூட்டம் இன்று நடைபெற்றது
கூட்டரங்கில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் புகைப்படம் மட்டுமல்லாது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் படமும் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் படத்தை மட்டும் முறையாக வைத்துவிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்களை அகற்றப்படாமல் திருப்பி மாட்டப்பட்டிருந்தது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்ததோடு உடனடியாக அந்த படத்தை திருப்பி மாட்டுமாறு கூறினர். ஆனால் திமுகவினரும் ஊராட்சி செயலாளரும் மறுத்ததை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் இரண்டு படங்களையும் திருப்பி மாட்டினர். இதனால் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக பொய் வழக்கு போடுவதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை மட்டும் வைப்பதற்கு சம்மதம் தெரிவித்ததோடு எடப்பாடி பழனிச்சாமி படத்தை அவர்களே அகற்றி தலைவர் மற்றும் செயலாளர் டேபிளில் தூக்கி எறிந்து விட்டுச் சென்றதால் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.