புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய கைக் கோடாரி
20 நாள்களுக்கு முன்பு வந்த ஆய்வு முடிவில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய கோடாரி என தெரிய வந்தது
HIGHLIGHTS
புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கோடாரியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகமாக புதுக்கோட்டை அருங்காட்சியகம் விளங்குகிறது. தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, வீரம் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் பல்வேறு விதமான விலங்கினங்கள், வீரர்கள் பயன்படுத்திய பொருட்கள், பறவையினங்கள் உள்ளிட்டவைகள் பாடம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவை தத்ரூபமாக இருப்பதால், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2020 -ஆம் ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, மங்கலமேடு பகுதியில் கோடாரி போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.இந்தக்கோடாரி எத்தகைய காலத்தைச் சேர்ந்தது என்பதை அறிய, அருங்காட்சியக நிர்வாகம் ஆய்விற்கு அனுப்பியது
கடந்த 20 தினங்களுக்கு முன்பு வந்த ஆய்வு முடிவில், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய கோடாரி என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பழமையான பொருட்கள் சிறப்பு கண்காட்சி இந்த மாத ஸ்பெஷல் என்ற பொருளில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த மாதம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோடரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏராளமான மக்கள் வந்து பார்வையிட்டு நமது தமிழர்களின் கலாசாரம் பொருட்கள் ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர்.