புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டிடம்: அமைச்சர் ரகுபதி ஆய்வு
நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய பேருந்துநிலைய கட்டடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்
HIGHLIGHTS
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், பழுதடைந்துள்ள கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (28.08.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது; புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய கட்டடமானது 40 ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டது. இக்கட்டடத்தில் திருச்சி பேருந்துகள் நிறுத்துமிடத்தில் தேநீர் கடை அருகில் கடைகள் மற்றும் நடைபாதைகள் வழியில் உள்ள வலுவிழந்த கான்கிரீட் பூச்சுகள் இன்று காலையில் பெயர்ந்து விழுந்தது. இதன்மூலம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் பேருந்துநிலையத்தின் ஸ்திரத்தன்மையை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி NIT குழுவினர் 14.08.2022 அன்று களஆய்வு மேற்கொண்டு 17.08.2022 அன்று மேற்படி பேருந்துநிலையக் கட்டடம் பழுதடைந்த பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதால் கட்டடத்தினை முழுமையாக இடித்து அகற்றலாம் என சான்றளித்துள்ளார்கள். அதன்படி பழைய நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றிவிட்டு புதிதாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பேருந்துநிலைய கட்டடம் அமைக்க மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களின் வழியாக தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய பேருந்துநிலைய கட்டடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.
ஆய்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, நகராட்சி ஆணையர் நாகராஜன், நகராட்சி பொறியாளர் சேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.