பெரம்பலூர் நகரில் தொடர் திருட்டு அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்
பெரம்பலூர் நகரில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள கார்த்தி பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வருபவர் நூர்ஜஹான் வயது 31. இவரது கணவர் மகபூப் அலி. துபாயில் வேலை பார்த்து வந்த இவர் உடல்நிலை சரி இல்லாததால் அங்கிருந்து ஊருக்கு வந்துள்ளார்.
நூர்ஜஹான் தனது கணவருடன் பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் உள்ள நடேசன் நகர் பகுதியில் தனது தகப்பனார் ஷாஜகான் வீட்டில் சில நாட்களாக தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் அருகில் வீட்டில் குடியிருப்பவர் தொலைபேசி மூலம் உங்கள் வீட்டின் பின் வாசல் திறந்து உள்ளதாக தெரிவித்தார்.
அதன்பேரில் நேரில் வந்த நூர்ஜஹான், வீட்டின் கதவை மர்ம நபர்கள் அறுத்து உள்ளே சென்று அறையில் வைத்திருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 1/4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் நகரில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.