'நாகை- 30' புகைப்பட கண்காட்சி:அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிக்கை
‘நாகை -30’ புகைப்பட கண்காட்சி தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளார்.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டி 'நாகை -30' என்ற பெயரில் தமிழக அரசின் சார்பில் ஐந்து நாட்கள் கோலாகல விழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. இந்த விழாவையொட்டி நாகை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு துறை அலுவலகங்கள் மின்னொளியில் ஒளிர்ந்து வருகிறது.
அதேநேரத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'நாகை- 30' விழா தொடர்பாக ஒரு புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியில் நாகை மாவட்டம் பற்றிய வரலாற்று குறிப்புகள், முக்கிய சுற்றுலாத்தலங்கள், முக்கிய அரசியல் நிகழ்வுகள் சம்பந்தமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் இந்த கண்காட்சியில் 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி நாகப்பட்டினம் புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் எதுவும் இல்லை என நாகை மாவட்ட மக்களின் மனக்குறையை வெளிப்படுத்தும் வகையில் 'இன்ஸ்டா நியூஸ்'வெப்சைட் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை தொடர்ந்து இன்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் 'நாகை மாவட்ட வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினர் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமானால் அம்மா வட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற புகைப்படங்களை கண்காட்சியில் இடம் பெற செய்ய வேண்டும். இந்த பிரச்சினையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலையிட்டு, ஜெயலலிதா படத்தை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுத்து நாகை மாவட்ட மக்களின் மனக்குறையை போக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.