நாகையில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு
நாகையில் நகராட்சி பகுதியில் உள்ள ஜவுளி கடைகள், பெரிய மால்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் நகராட்சி அதிகாரிகள் கொரோனா விதிமீறல்கள் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 201 நபர்களுக்கு கொரோனாத் தோற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி முகக் கவசங்கள் பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், மருந்துக்கடைகள், ஆட்டோ பேருந்து உள்ளிட்ட இடங்களில் நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளிகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் பொதுமக்களுக்கு 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அரசு அறிவிப்பை மீறி அளவுக்கு அதிகமான பணியாளர்களை வைத்திருந்த ஜவுளி கடைக்கும் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆட்டோவில் கூடுதல் பயணிகளை ஏற்றிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.