நாகை : தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம், பைக் கொள்ளையர்கள் செயின் பறித்துச் சென்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வந்தன. இதனை அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி, டி.எஸ்.பி முருகவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை தேடி வந்தனர். சம்பவத்தன்று காலை தனிப்படை போலீசார், நாகை புதிய பேருந்து நிலையம் பகுதி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பிக்கொண்டு வந்த வழியே செல்ல முயன்றனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட காரைக்காலை சேர்ந்த சேதுமணி(24),விவேக் (23) மற்றும் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த விஜய் (26) என தெரியவந்தது.தொடர்ந்து அவர்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 18 பவுன் நகை மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூவரையும் கைது செய்து, நாகப்பட்டினம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை நாகை மாவட்ட எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா நேரில் அழைத்து பாராட்டினார்.