'இன்னுயிர் காப்போம் 48 மணி நேரம்' திட்டத்தில் முதல் நோயாளிக்கு சிகிச்சை
இன்னுயிர் காப்போம் 48 மணி நேரம் திட்டத்தின் கீழ் முதல் நோயாளிக்கு ஒரு லட்ச ரூபாயில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க. அரசு பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் 48 மணிநேரம் என்கிற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டம் மூலம் விபத்துகளில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு முதல் 48 மணி நேரம் வரையில் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் நோயாளியாக விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் இலவசமாக தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம் எலுமிச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் எலத்தகிரி என்னுமிடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது டிராக்டர் மோதியதில் வலது கை மற்றும் வலது கால் நசுங்கி பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த மருத்துவமனை தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளதால் மருத்துவர்கள் தனசேகரன், அமுதா, ராஜசேகரன் ஆகியோர் உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்ட சிவகுமாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ரஷ்ய நாட்டு தயாரிப்பான வளையம் சிவகுமாரின் காலில் பொருத்தப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டது. அதேபோல் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையால் நோயாளி சிவக்குமார் தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசின் திட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் ஒரு லட்ச ரூபாய் செலவில் முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்கு மேல் நோயாளி விருப்பப்பட்டால் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லலாம் என்றும் முதலமைச்சர் காப்பீடு திட்டம் இருக்கும் பட்சத்தில் இதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் புதிய இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் பயனாளி சிவகுமார் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.