வாலிபர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை கள்ளக்காதல் விவகாரம் காரணமா ?
திருச்சியை சேர்ந்த வாலிபர் கரூரில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரம் இதற்கு காரணமா என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே புறவழிச் சாலையில் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்த நபரை சம்பவத்தன்று பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். டீக்கடையில் இருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அந்த நபரின் உடலில் பல இடங்களில் வெட்டப்பட்டு பலத்த காயமுற்று கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு. வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலையுண்ட நபர் திருச்சி நகரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (27) என்பதும் இவர், எலெக்ட்ரிசியனாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.திருச்சியை சேர்ந்த நபர் கரூரில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ரஞ்சித்குமாருக்கும் வேலாயுதம்பாளையத்தில் உள்ள பெண் ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணத்தால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மேலும் , 3 பைக்குகளில் வந்த ஆறு மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ரஞ்சித்குமார் வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக போலீசாருக்கு தெரியவந்தது.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேலம்பாளையம் காவல் நிலைய போலீசார் தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.