கரூரில் உள்ள வணிக வளாகத்தில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
கரூரில் வணிக வளாகத்தில் உள்ள லிப்ட்டின் அருகில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
HIGHLIGHTS
கரூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. 6 தளங்களை கொண்ட இந்த வணிக வளாகத்தில் 50 க்கும் அதிகமான கடைகள் உள்ளன.
இந்த வணிக வளாகத்தின் ஆறு தளங்களுக்கும் செல்வதற்கு லிப்ட் வசதி உள்ளது. இன்று லிப்ட்டின் அருகில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கரூர் நகர காவல் நிலையப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் கரூர் தாந்தோணிமலையை சேர்ந்த அருள்ராஜ் என்பதும் தச்சு வேலை பார்த்து வந்தவர் எனவும் தெரிய வந்தது.
அருள்ராஜின் இரு சக்கர வாகனம், வணிக வளாகத்தில் அருகில் தனியாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அருள்ராஜ் எதற்காக வணிக வளாகத்துக்கு வந்தார், தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்