விவேகானந்தர் மண்டபத்திலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி கூண்டு பாலம்!
அதன்படி 37 கோடி ரூபாய் செலவில் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
HIGHLIGHTS
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் அமைந்துள்ளது உலகமே வியந்து பார்க்கும் திருவள்ளுவர் சிலை. அதன் அருகிலேயே விவேகானந்த மண்டபமும் இருக்கிறது. பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் மூலம் இங்கு படகு சவாரி செய்து செல்லமுடியும். முதலில் திருவள்ளுவர் சிலைக்கு சென்றால் அங்கிருந்து மீண்டும் படகு மூலம் விவேகானந்த மண்டபத்துக்கு செல்லவேண்டும். இதனால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றாலும் இதன் காரணமாக கூடுதல் செலவு ஆவதும் ஒரு கருத்தில் கொள்ளப்படவேண்டியதாக இருக்கிறது.
இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக இருக்கிறது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்துக்கு அருகே ஆழம் குறைந்த பகுதிகள் இருக்கின்றன. பாறைகளும் மிக அதிகமாக காணப்படுவதால் அங்கு படகுகளை இயக்குவதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது.
இதன்காரணமாக நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும் வரும் பயணிகள் இங்கு செல்ல முடியாத நிலை அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். இதன்காரணமாக திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையில் பாலம் அமைக்க பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு இந்த இரண்டு இடங்களையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி 37 கோடி ரூபாய் செலவில் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் மேலே, கீழே என கண்ணாடியால் செய்யப்பட்டிருப்பதால் கீழே கடலையும் கண்ணாடி வழியாக பார்க்கமுடியும் வகையில் வெளிநாடுகளில் இருப்பது போல அமைக்கிறார்கள்.