மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை : ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சம் இழந்ததால் விரக்தி

மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வங்கி அதிகாரி பிரேம்ராஜ் (பழைய படம்).
நாமக்கல்,
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்ததால் விரக்தியடைந்து, மனைவி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்த வங்கி அதிகாரி பிரேம்ராஜ், கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பெரியமணலியைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மோகனப்பிரியா (33) என்ற மனைவி, பிரினிதிராஜ் (6) என்ற மகள், மற்றும் ஒன்றரை வயதில் பிரினீஷ்ராஜ் என்ற மகனும் இருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் நாமக்கல் சேலம் ரோட்டில், பதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பிரேம்ராஜ் சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சம் இழந்துள்ளார். பணத்தை வெளி ஆட்களிடம் கடன் வாங்கியதால் அவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டுள்ளனர். பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாமல் விரக்தியடைந்து நிலையில் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அதிகாலை பிரேம்ராஜ் வீட்டில் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சம் பணத்தை இழந்ததால் 4 பேரும் தற்கொலை செய்துகெள்வதாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு வீட்டில் இருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவான பிரேம்ராஜை பிடிக்க நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை, கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அமராவதி பாலம் அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து பிரேம்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தது பிரேம்ராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மோகனப்பிரியா மற்றும் அவரது இரு குழந்தைகளின் சடலங்கள், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தரியில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu