கோபி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

ஈரோடு : கோபி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூர்சிறுவலூர் அருகே உள்ள சந்திராபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சந்திராபுரத்தை சேர்ந்த பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (வயது 64) விவசாயம் செய்து வருகின்றனர்.
பரமேஸ்வரன் மற்றும் சரஸ்வதி தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களுடைய பிள்ளைகள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ள படுக்கை அறையில் சரஸ்வதி தூங்கச் சென்றார். வீட்டின் முன்பு உள்ள கயிற்றுக் கட்டிலில் படுத்து பரமேஸ்வரன் தூங்கினார். வீட்டின் கதவை சரியாக மூடாமல் சரஸ்வதி தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை மர்மநபர் நைசாக வீட்டுக்குள் புகுந்து சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பினார். இதைக் கண்டதும் அவர் சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து ஓடி இருளில் மறைந்துவிட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நகையை பறித்துச் சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர் போலீசார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu