தர்மபுரி அருகே கட்டட மேஸ்திரியிடம் ரூ.60 ஆயிரம் அபேஸ்
தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி பகுதியில் கட்டட மேஸ்திரியிடம் ரூ.60 ஆயிரம் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி நடராஜன்(55). இவர், ஒட்டப்பட்டி அருகே சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக, ஒட்டப்பட்டியில் இயங்கும் தேசிய மய வங்கி ஒன்றின் கிளையில் வங்கிக் கடன் பெற்றுள்ளார்.
இந்த கடன் தொகை இவரது வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ளது. அதில் இருந்து, கட்டுமான செலவுக்காக ரூ.60 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த இருவர் வழியில் ஓரிடத்தில், பணம் கீழே விழுந்து விட்டதாகக் கூறி கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.
உடனே வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நடராஜன் பணத்தை தேடியுள்ளார். இந்த தருணத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் அவரது வண்டியில் இருந்த பணம் வைக்கப்பட்டிருந்த பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். தனது இருசக்கர வாகனத்தில் உடனே அவர்களை விரட்டிச் சென்றபோதும் நடராஜனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில், பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.