தொப்பூர் கணவாயில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: தூத்துக்குடி டிரைவர் சாவு
தொப்பூர் கணவாயில் டைல்ஸ் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தூத்துக்குடி டிரைவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டம், சிலுவாப்பட்டி தாய் நகர் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி இவரது மகன் ராமர் வயது 34. டிரைவர். இவர் ஓசூரில் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் டைல்ஸ் ஏற்றிகொண்டு சென்று கொண்டிருந்தார்.
இவர் காலை 6 மணியளவில் வந்து கொண்டிருந்தார் .தர்மபுரி அடுத்த தொப்பூர் கணவாய் பகுதியில் செல்லும் பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடியது.
இதில் கண்டெய்னர் மட்டும் தனியாக கழன்று இடது புற சாலையில் கவிழ்ந்தது. டிரைலர் தனியாக சேலம் தர்மபுரி சாலையில் பாறையில் மோதி நின்றது. இதில் டிரைவர் ராமர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீசார் சரிசெய்தனர்.