மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்
தர்மபுரி மாவட்டத்தில், 1300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில், 1300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, வழங்கினார். இந்நிகழ்விற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி, பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு சலுகைகளான கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, திருமண நிதி உதவி, மான்யத்துடன் கூடிய வங்கி கடனுதவி மற்றும் வருவாய் துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியமரூ.1000- போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பயனபடுத்தும் அனைத்து வகையான உபகரணங்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
சிறப்பு திட்டமாக, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் துறையின் கீழ் செயல்படும் ALIMCO நிறுவனத்தின் ADIP திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தருமபரி மாவட்டத்தில் 04.01.2021 முதல் 12.01.2021 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவர்கள் பரிந்துறையின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் 855 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 73,29, 840- மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. இன்று , சுமார் 233 மாற்றுத்திறனாளிகளுக்குரூ.19,34,000- மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த பள்ளி மூலம் கல்வி பயிலும் 445 மாற்றுத்திறன் மாணக்கர்களுக்கு 21,59,087-மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் கொரானா தடுப்பூசி செலுத்துவதில் தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்வில் அலிம்கோ நிறுவன முதுநிலை மேலாளர் அசோக்குமார், முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.