இறப்பு சான்றிதழில் குளறுபடி: தருமபுரி கலெக்டரிடம் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் புகார்!
தருமபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறப்புக்கான காரணம் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கப்படுவதாக, ஆட்சியர் திவ்யதர்சினியை சந்தித்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புகார் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, பாலக்கோடு எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., ஏ.கோவிந்தசாமி, அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் ஆகியோர், தருமபுரி ஆட்சியர் திவ்யதர்சினியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பின் காரணமாக பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். அவ்வாறு இறந்தவர்களின் இறப்புச்சான்றிதழில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்ற விவரம் குறிப்பிடப்படாமல் வழங்கப்படுவதாக பொதுமக்கள் பலரும், சட்டமன்ற உறுப்பினர்களிடம் முறையிடுகின்றனர்.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் பலர் இறந்திருக்கலாம், எனினும் இறந்தவர்களில் பலர் இறப்பிற்கான உண்மைத் தன்மையினை கண்டறிந்து குறிப்பிட வேண்டும். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களில், நோயாளி தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்ற விவரம் அளிக்கப்பட வேண்டும்.
அப்போதுதான், குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்தலைவியை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு சலுகைகளை பிற்காலத்தில் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.
மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து, உண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறப்புச்சான்றிதழில், இறப்பிற்கான காரணத்தை குறிப்பிட்டு வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.