வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு புதுப்பித்தல்; 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள் 27ம் தேதிக்குள் இணையம் வாயிலாக புதுப்பித்துக்கொள்ளலாம்.
HIGHLIGHTS
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள் வரும் 27ம் தேதிக்குள் இணையம் வாயிலாகவோ, பதிவஞ்சல்மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம் என அரியலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித்தகுதியினை பதிவு செய்து 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இச்சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் 27.08.2021-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள், தொடர்புடைய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி 27.08.2021-க்குள் பதிவுதாரர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.