அரியலூரில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி நடத்திய ஆய்வு கூட்டம்
அரியலூரில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ். குமரி பெண்களின் உரிமைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் ஏ .எஸ்.குமரி தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் ஏ.எஸ்.குமரி, அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள், வழக்குப்பதிவு மற்றும் நடவடிக்கைகள் குறித்த விபரம், முதியோர் நலன் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள், தீர்வு மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் விவரம், ஒருங்கிணைந்த சேவை விவரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் ஏ.எஸ்.குமரி செய்தியாளர்களிடம் பேசும்போது
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த பிப்ரவரி 15ஆம் நாள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்தார். இந்த ஆணையம் மாவட்டங்களிலிருந்து வரப்பெறும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்கள், வரதட்சணை கொடுமை, முதியோர் நலன் பாதுகாப்பு உள்ளிட்ட புகார்களை விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட புகார் மனுக்களை தொடர்புடைய மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை, மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அனுப்பப்படும் புகார் மனுக்கள் மாவட்டங்களில் முறையாக விசாரிக்கப்படுவது குறித்தும், மனுக்களின் தற்போதைய நிலை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மாவட்டங்கள் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்கும் வகையில் ஐ.சி.சி கமிட்டி (உலக புகார் அமைப்பு) உள்ளது. இந்த கமிட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அல்லாத நிறுவனங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் இக்கமிட்டியை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் அமைக்க ஆணையத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கமிட்டியில் அந்த அலுவலக உறுப்பினர்களுடன் வெளியில் உள்ள ஒரு என்.ஜி.ஓ-வை சார்ந்த உறுப்பினரும் இடம் பெறுவார். இவர்கள் பணியிடத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும், குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக நல அலுவலகத்திற்கு வரப்பெறும் குடும்ப தகராறு தொடர்பான புகார்கள் மீது சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, விருப்பப்படும் கணவன் மனைவியை மீண்டும் சேர்த்து வைத்தல் மற்றும் விருப்பம் இல்லாத நபர்களுகளை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தல் மற்றும் சுயதொழில் செய்ய பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்க உள்ளது. மேலும், அதேபோன்று பணியிடத்தில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக ஒரு செயலியும் விரைவில் உருவாக்கப்படவுள்ளது. இதனால் பெண்கள் தங்களது புகார்களை ஆன்லைன் மூலம் எளிதாக தெரிவிக்கலாம். மேலும் தமிழகத்தில் எங்கெல்லாம் பெண்களின் உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கு பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சிவக்குமார், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.திருமேணி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஆர்.ராணி, மாவட்ட சமூக நல அலுவலர் நா.சாவித்ரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.