அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அரியலூர் நகரம் மற்றும் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரகாலமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில், இரவில் பலத்த இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பளூர், மீன்சுருட்டி உள்ளிட்ட பலப்பகுதிகளில் மற்றும் கிராமங்களிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு கனமழையாக பெய்தது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னரே கொட்டும் கனமழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டும் அரியலூர் நகரில் மற்றும் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழைபொழிவு இருந்த நிலையில், இந்த ஆண்டும் மழைப் பொழிவு நன்றாக இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, தண்ணீர் பற்றாக்குறையும் தீரும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.