அரியலூர்: கொள்ளிட கரையில் ஆடி பெருக்கு விழா கொண்டாடிய புதுமண தம்பதிகள்
அரியலூர் மாவட்ட கொள்ளிட கரையில்புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு புதுத்தாலி கயிற்றினை மாற்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர்.
HIGHLIGHTS
ஆடி மாதம் 18-ம் நாள் என்பது தமிழர் திருநாள். நீரை வணங்கும் தமிழரின் பண்பைப் பறைசாற்றும் விழா. அந்நாளில் தமிழகத்து அனைத்து இடங்களிலும் நீரினை வழிபடும் நிலை இன்றும் உள்ளது.
நீரினை பெண்ணாக காவிரித்தாயாக கருதி அதற்கு கருகமணி வளையல் காது ஓலை மஞ்சள், குங்குமம், பூச்சரம் மற்றும் வெல்லம் கலந்த பச்சரிசி வைத்து, அதை நீருக்கு காணிக்கையாக்கி அந்நீர்நிலையில் விடுவது வழக்கம். காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறு ஓடும் பகுதியிலும், கிராமங்களில் ஏரி, குளங்களிலும் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெறும்.
அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரை கீழணை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதுமண தம்பதிகள் வருகை புரிந்து புதுத்தாலிக்கயிறு மாற்றி செல்வது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவானது பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட முடியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில். இந்த ஆண்டு ஆற்றில் அதிகப்படியான நீர்வரத்து இருந்த காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு புதுத்தாலி கயிற்றினை மாற்றி காவிரித்தாயை வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.
மேலும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான தம்பதிகள் வருகை புரிந்து ஆற்றில் மண்ணால் பிள்ளையார் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மாலையிட்டு பழம் பச்சரிசி மாவு உள்ளிட்டவைகளை படையலிட்டு புதுத்தாலி மாற்றி திரண்டு வரும் நீரை தெய்வமாக வழிபட்டனர். புதுமணத்தம்பதிகள் தங்களது திருமணத்தின்போது பயன்படுத்திய மாலைகளை நீரில் விட்டனர்.
அரியலூர் மாவட்டம் முழுவதும் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதையொட்டி, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, 2டிஎஸ்பி, 4 காவல் ஆய்வாளர்கள், 180 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.