அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
அரியலூர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ளதால் நீதிமன்ற பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் வழக்கறிஞர்கள் சங்ககூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அரசு வழக்கறிஞர்களைத் தவிர மற்ற வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் வந்து வழக்காட தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணை எல்லாம் " வீடியோ கான்பரன்சிங்" மூலம் தான் நடைபெறும். கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் கூடம் மற்றும் நூலகம் ஆகியவற்றை திறக்க வேண்டுமென்று பல்வேறு விதமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து சாதகமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால் இன்று முதல் உயர்நீதிமன்றத்திலுள்ள வழக்கறிஞர்கள் கூடத்தை மூடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் இன்று ஒருநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப்பணிகளிலிருந்து விலகியிருப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். நமது கோரிக்கையும் அதுவாக இருப்பதால், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் நாம் நீதிமன்றப் பணிகளிருந்து விலகியிருப்போம் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து அரியலூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட ஒன்பது நீதிமன்றங்களில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணித்தனர். வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.