அரியலூர் அருகே மொழிப்போர் தியாகிக்கு அஞ்சலி
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி சின்னசாமிக்கு அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் திமுக சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்த திமுக தொண்டரான சின்னசாமி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திருச்சி ரயில்முன்பு தீக்குளித்து உயிர்தியாகம் செய்தார். மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று சின்னசாமியின் சொந்தஊரான கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் உள்ள சின்னசாமியின் உருவச்சிலைக்கு திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர் தலைமையில் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பாளை.அமரமூர்த்தி, ஒன்றியச்செயலாளர் கென்னடி உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில், கீழப்பழுவூரில் மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்கள், போராட்டத்தை நினைவு கூறும் புகைப்படங்கள், ஆவணங்களை கொண்ட மணிமண்டபம் ஒன்றை கட்டவேண்டும் என்று கீழப்பழுவூர் பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.