திருச்சி 'டிக்' அலுவலகத்தில் விஜிலன்ஸ் ரைடு- ரூ.3 லட்சம் பறிமுதல்

திருச்சி 'டிக்' அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-05-16 15:23 GMT

திருச்சி மாவட்ட தொழில் மையம் (டிக்)கலெக்டர் அலுவலக சாலையில் இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட பொது மேலாளராக இருப்பவர் ரவீந்திரன்.இன்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த அலுவலகத்திற்குள் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் திடீரென புகுந்தனர்.

அவர்கள் அலுவலக  கதவை சாத்திவிட்டு ஊழியர்கள் யாரையும் வெளியே செல்லவிடாமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் பொது மேலாளர் அலுவலக அறை மற்றும் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் ரூ 3 லட்சம் இருந்ததை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த பணம் அங்கு எப்படி வந்தது என தெரியவில்லை.

மாவட்ட தொழில் மையம் என்பது மாவட்டத்தில் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கும் ஒரு அரசு நிறுவனமாகும். இங்கு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென வந்து சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ 3 லட்சம் பணம் பறிமுதல் தொடர்பாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், உதவி பொறியாளர் கம்பன் ஆகிய இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அலுவலக ஊழியர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் திருச்சி உறையூரில் உள்ள ரவீந்திரனின் வீடு, திருவெறும்பூர் பகுதியில் உள்ள உதவி பொறியாளர் கம்பனின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

Tags:    

Similar News