வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு

இதுவரை வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Update: 2024-04-28 14:00 GMT

வெள்ளியங்கிரி மலை

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) என்பவருடன், அவர்களது நண்பர்கள் 10 பேர் வெள்ளியங்கிரி மலையேற வந்துள்ளனர்.

மலை அடிவாரத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு, பூண்டி மலை ஏற தொடங்கினார். ஒன்றாவது மழை ஏறும் போது திடீரென புண்ணியகோடிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து உடன் இருந்தவர்கள் கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் புண்ணியகோடி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து ஆலந்துறை காவல் துறைக்கு தகவல் தெரிவித்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News