சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிறுவாணி அணை முக்கிய பங்கு வகிக்கிறது.

Update: 2024-04-28 14:15 GMT

கோவை மாநகராட்சி

கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிறுவாணி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆணையானது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தமிழக எல்லையில் இருந்தாலும், அணையானது கேரளா மாநிலம் எல்லைக்குள் உள்ளது. இதனால் 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 45 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அரசு அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மாநகராட்சியில் 30 வார்டு பகுதிகளுக்கும், வழியோரங்களில் உள்ள 22 கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோவையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு வருகிறது. சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் நிலவும் வெயில் மற்றும் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் காரணமாக அணையின் நீர்மட்டம் 12 அடியாக சரிந்து உள்ளது. இதை அடுத்து அணையில் இருந்து குடிநீருக்காக நாளொன்றுக்கு 37 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, சிறுவாணி அணையின் முழு கொள்ளளவை எட்டினால் அணையில் இருந்து நாளொன்றுக்கு 106 எம்.எல்.டி. வரை தண்ணீர் எடுக்க முடியும். ஆனால் கடந்தாண்டு போதியளவு பருவமழை பெய்யாததால் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டவில்லை.

இந்த நிலையில் வெயில் காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிந்து விட்டது. இதை அடுத்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு 37 எம்.எல்.டியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதில் 34 எம் எல்.டி தண்ணீர் மாநகராட்சிக்கும் மீதமுள்ள 3 எம்.எல்.டி வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள தண்ணீரை கொண்டு மே மாதம் வரை குடிநீர் விநியோகம் செய்ய முடியும். வழக்கமாக மே இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கும் அவ்வாறு பருவ மழை பெய்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை எனக் கூறினர்.

Tags:    

Similar News