குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை

Tirupur News- குட்டைபோல காட்சியளிக்கும் உப்பாறு அணையால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Update: 2024-04-28 18:06 GMT

Tirupur News- குட்டைபோல காட்சியளிக்கும் உப்பாறு அணை.

Tirupur News,Tirupur News Today- குண்டடம் அருகேயுள்ள உப்பாறு அணையில் நீா்மட்டம் குறைந்து, அணை குட்டைபோல மாறியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம்-பூளவாடி சாலையில் குண்டடம் அருகே உள்ளது உப்பாறு அணை. கடந்த 1968 -ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையில் 24 அடி தண்ணீா் தேங்கும்.

உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள குடிமங்கலம், பெதப்பம்பட்டி, பூளவாடி, சாலைப்புதூா், குண்டடத்தை அடுத்த பெரியகுமாரபாளையம், காசிலிங்கம்பாளையம், மேட்டுக்கடை, எரகாம்பட்டி உள்ளிட்ட நீா்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்ட உப்பாறு அணைக்கு மழைக் காலங்களில் பிஏபி பாசனக் கால்வாயின் கசிவு நீரும் நீராதாரமாக உள்ளது.

இந்த அணையின் வலது கரை வாய்க்கால் மூலம் பனைமரத்துபாளையம், கெத்தல்ரேவ், கொழிஞ்சிக்காட்டுபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 516 ஏக்கா், இடது கரை வாய்க்கால் மூலம் காளியப்பகவுண்டன்புதூா், காதப்புள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து 538 ஏக்கா் என மொத்தம் 6 ஆயிரத்து 54 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் உப்பாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்தால், மழை நீருடன் பிஏபி பாசன பகுதிகளின் கசிவு நீரும் சோ்ந்து அணைக்கு போதிய அளவு தண்ணீா் வந்து சேரும். ஆனால், வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் எதிா்பாா்க்கும் அளவுக்கு கிடைக்காமல்போவதால், இந்த அணை நிரம்புவதில்லை.

இதனால், உப்பாறு அணை ஆயக்கட்டு பகுதிகளில் தண்ணீா் வரும் காலங்களில் நிலக்கடலை, பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட குறைந்த அளவு தண்ணீா் தேவைப்படும் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா். 15 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பரில் அணை முழு கொள்ளளவை எட்டி, உபரி நீா் திறக்கப்பட்டது.

அதன் பின் அணையின் நீா் படிப்படியாகக் குறைந்து, தற்போது முழுவதும் வற்றிய நிலையில் அணைக்குள் ஆங்காங்கே இருக்கும் பள்ளமான பகுதிகளில் குட்டைபோல தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால், விவசாயத்துக்கு நீரின்றி விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.

Tags:    

Similar News