திருவண்ணாமலையில் விவசாயிகள் மண்பானைகளை உடைத்து நூதனப் போராட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மண்பானைகளை உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-02-24 07:26 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மண்பானைகளை உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நல்லவன்பாளையம் கிளைத் தலைவா் கோதண்டன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் பலராமன், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், அயூப்கான் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

போராட்டத்தின்போது, விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த மண் பானைகளை தரையில் போட்டு உடைத்து தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இந்தப் போராட்டம் குறித்து விவசாயிகள் கூறியதாவது:

ஊராட்சி நிதியை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுத்திரம் கிராமத்தில் இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புதிதாக அமைத்து தர வேண்டும். பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட 16 இலவச வீட்டு மனை பட்டாவை அரசு கணக்கில் ஏற்றிட வேண்டும். புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

பழைய கால்வாய்களை தூர்வார வேண்டும். கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். திருவண்ணாமலை நகர கழிவுநீர் ஓலையாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு மற்றும் சீமை கருவேலை மரங்களை அகற்றிட வேண்டும் என தெரிவித்தனர்.

போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், நல்லவன்பாளையம் கிளை நிா்வாகிகள் , விவசாயிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News