மக்கும் மக்காத குப்பை பிரித்தல்: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Separation of biodegradable and non-biodegradable waste
திருவண்ணாமலை நகராட்சியும், திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பும் இணைந்து மக்கும் குப்பை, மக்காத குப்பையை பயிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 4-வது வார்டில் வளையல்கார தெருவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் முன்னிலை வகித்தார். நகராட்சி பரப்புரையாளர் எம்.ஜெயபாரதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் கலந்துகொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுக்க 80 குடும்பங்களுக்கு 2 பிளாஸ்டிக் தொட்டி வீதம் 160 தொட்டிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பி.முருகேசன் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களிடையே டெங்கு போன்ற காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் தினசரி பொதுமக்களிடையே நல்ல உறவை ஏற்படுத்தி வாகனங்கள் மூலம் குப்பைகளை பெற்று சிறப்பாக பணியாற்றி வருபவர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் நகர நல அலுவலர் டாக்டர் எ.மோகன், துப்புரவு ஆய்வாளர்கள் ஏ.கார்த்திகேயன், செல்வகுமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், தே.மேகநாதன், பரப்புரையாளர் பி.தமிழரசி, தூய்மை அருணை நிர்வாகிகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை காவலர் வி.எஸ்.ரவீந்திரன் நன்றி கூறினார்.