திருவண்ணாமலை திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அண்ணாதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர் பாண்டியனிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

Update: 2024-03-25 10:35 GMT

மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் அண்ணாதுரை

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் 20 ஆம் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 30ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்..

திருவண்ணாமலை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக ஆட்சியர் பாஸ்கரபாண்டியனும், ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ பிரியதர்ஷினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 12 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் வேட்பு மனு தாக்கல் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று அனைத்து கட்சி பிரமுகர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் கேட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று கட்ட பாதுகாப்பு மாவட்ட காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர் பாண்டியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவருடன் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை , வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோரை சந்தித்து மாவட்ட திமுக அலுவலகத்தில் வாழ்த்து பெற்றார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் சரவணன், கிரி, நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன்,  மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News