மருமகளுடன் தகராறு: மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்

Update: 2023-04-17 07:16 GMT

மருமகளுடன் தகராறு ஏற்பட்டதால் மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்து உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூங்கா நகர் மாதுளம் பூத்திருப் பகுதியில் வசித்து வருபவர் செல்வமணி (வயது77). ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆவார். இவரது மகன் தணிக்கைவேலு (48) இவர் திருவள்ளூர் தாலுகா போலீஸ் ரோந்து பிரிவு துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி தீபா(40) என்ற மனைவி மற்றும் கணேஷ்,ஶ்ரீயாஸ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். தணிக்கை வேலு தனது பெற்றோர்களுடன் கூட்டுக் குடும்பமாக சில நாட்களுக்கு வசித்து வந்துள்ளார். பின்னர் தனது மனைவி இரண்டு மகன்களுடன் திருவள்ளூர் அருகே காக்களூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தணிக்கை வேலு வீட்டில் தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர். தணிக்கை வேலுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து தணிக்கை வேலுவின் தந்தை செல்வமணி தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் ஒரு வருட காலமாக தன் மகனுக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது மகனின் வீட்டிற்கு வந்து சிலர் தனது மகனை தாக்கியதாகவும் இதனால் மன உளைச்சல் அடைந்த தனது மகன் தணிக்கை வேலு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததாகவும். இதனால் தன் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News