லாரியில் தீ விபத்து-ரூ.10 லட்சம் பொருட்கள் நாசம்

Update: 2021-02-11 07:15 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று இராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை மதுரை மாவட்டம் பெறையூரை சேர்ந்த கருப்புசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரியானது நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த காளப்பநாயக்கன்பட்டி வழியாக சென்ற போது மின் கம்பியில் வைக்கோல் மோதியதில் திடீரென வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக லாரியை நிறுத்திய ஓட்டுனர் கருப்புசாமி லாரியில் இருந்து வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த இராசிபுரம் தீயணைப்பு துறையினர் கொளுந்து விட்டு எரிந்த தீ மேலும் பரவாமல் தடுத்து ஜேசிபி உதவியுடன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதில் 10 இலட்ச ரூபாய் மதிப்பிலான லாரி மற்றும் வைக்கோல் எரிந்து சேதமானது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் இராசிபுரம் சேந்தமங்கலம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News