நிதி நிறுவன நெருக்கடியால் மனைவி தற்கொலை: நிவாரணம் கேட்டு கணவர் மனு

மைக்ரோ நிதி நிறுவனம் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர், நிவாரணம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

Update: 2024-04-23 01:10 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ராகுல் மற்றும் குடும்பத்தினர்.

மைக்ரோ நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்த பெண்ணின் கணவர் நிவாரணம் கேட்டு நாமக்கல் மாவட்டகலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் கார்த்திகா (வயது 21) இவரது கணவர் ராகுல்( 27.) ராகுல் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். கார்த்திகா 3 வயதான குழந்தை தர்ஷினியுடன் வீட்டில் இருந்தார். இவரது தாயார் ராணி,( 40). இவர் தனது கணவர் இறந்து விட்டதால்  தம்மண்ணன் வீதியில் உள்ள இளைய மகள் வீட்டில் இருந்து வந்தார்.

சில நாட்களுக்கு  முன்பு ராகுல் கார்த்திகா ஆகிய இருவரும் ராணி வீட்டிற்கு குழந்தையுடன் வந்து, நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதால், செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று கூறி உள்ளனர். ஒரு மாதம் தங்கி விட்டு, ராகுலின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டனர். அங்கும் வந்து நிதி நிறுவனத்தினர் தொந்தரவு கொடுப்பதாக கார்த்திகா, ராணியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஏப். 11 ம்தேதி மாலை 03:30 மணியளவில் கார்த்திகா, வீட்டின் பூஜை அறையில் உள்ள விட்டத்தில் தூக்கு மாட்டி தொங்கிக்கொண்டு இருப்பதாக ராணியிடம் ராகுல் கூற, ராணி மற்றும் உறவினர்கள் நேரில் சென்று, கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது, அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து ராணி குமாரபாளையம் போலீசில் புகார் செய்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் கார்த்திகாவின் இறப்புக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க கோரி, கார்த்திகாவின் கணவர் ராகுல் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் மனு கொடுத்துள்ளார்.

Tags:    

Similar News