ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட பணிகளை நாமக்கல் கலெக்டர் ஆய்வு

Agricultural Development -ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட பணிகளை நாமக்கல் கலெக்டர் ஆய்வு

Update: 2022-10-10 06:45 GMT

நாமக்கல் மாவட்ட வேளாண் பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

Agricultural Development -நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்ற நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், தமிழக அரசின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு விவாயிகளை ஒருங்கிணைத்து 15 ஏக்கர் விவசாய நில தொகுப்பு (கிளஸ்டர்) கொண்ட விவசாயிகள் குழு அமைத்து, அந்த விவசாய நிலங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் இதுவரை 11 விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு குழுவினர் நிலங்களை மேம்படுத்திட போர்வெல் கிணறு உள்ளிட்ட வசதிகள் முற்றிலும் இலவசமாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பதிவுசெய்த நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கார்கூடல்பட்டி விவசாய குழுவின் நிலங்களையும், அதில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களையும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கார்கூடல்பட்டி விவசாய குழுவில் பதிவு செய்யப்பட்ட விளை நிலங்களில் போர்வெல் அமைத்தல், நுண்ணீர் பாசனம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.10.82 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கார்கூடல்பட்டி விவசாய குழுவின் நிலத்தில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மேலும் அவர்களது 15 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் மாமரக்கன்றுகள் இலவசமாக நட்டுத்தரப்பட்ட்டு உள்ளதையும், போர்வெல் கிணற்றில் இருந்து தண்ணீர் சொட்டுநீர் பாசனம் மூலம் பாசன வசதி செய்திட, துறை மூலம் சாதனங்கள் இலவசமாக வழங்கி நிறுவப்பட உள்ளதையும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது விவசாயிகளிடம் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நன்மைகள், மேற்கொண்டு வரும் விவசாய பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். முன்னதாக ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் சபாபதி என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிர் வெள்ளை ஈக்களால் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வெள்ளை ஈக்களால் ஏற்படும் பாதிப்பை எளிய முறையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குநர் கணேசன் விவசாயிகளிகடம் எடுத்துரைத்தார். பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து உள்ளதால் மழைநீரை நன்றாக சேமித்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்துமாறும் கலெக்டர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News