ராசிபுரத்தில் வாகனக் கடன் செலுத்தாத ஆட்டோ உரிமையாளருக்கு சிறை
தனியார் நிதி நிறுவனத்தில் வாகனக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் ஆட்டோ உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மாரிமுத்து. இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வாகன கடன் பெற்று சரக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். அவர் கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை.
இதனையடுத்து தனியார் நிதி நிறுவனத்தினர் கடன் பாக்கி ரூ.11,98,159/- ஐ வசூல் செய்வதற்காக மாரிமுத்துவுக்கு எதிராக நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு மாரிமுத்து கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையொட்டி, அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
பிடியாணையின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாரிமுத்து கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் மாரிமுத்து திருச்சி சிவில் சிறையில் அடைக்கப்பட்டார்.