மது வாங்க மனைவி பணம் தர மறுப்பு: விரக்தியில் கணவர் தற்கொலை

மோகனூர் அருகே மது வாங்க மனைவி பணம் கொடுக்காததால், விரக்தியடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-28 11:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள மணியங்காளிபட்டி புது காலனியை சேர்ந்தவர் முருகேசன் (52), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (50). முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று முருகேசன் தனது மனைவி விஜயலட்சுமியிடம், மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த முருகேசன் வீட்டை விட்டு வெளியே சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பஸ் ஸ்டாப் அருகில் மயங்க்கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News