நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 93.51 சதவீதம் பேர் தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 93.51 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-05-10 05:10 GMT

நாமக்கல் மாவட்ட  ஆட்சியர் உமா.

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 93.51 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் 104 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேவில் 296 பள்ளிகளை சேர்ந்த 10,147 மாணவர்களும், 9,612 மாணவிகளும் என, மொத்தம் 19,759 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 9,318 மாணவர்களும், 9,159 மாணவியர்களும் என மொத்தம் 18,477 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.83, மாணவியர் 95.29 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.51 ஆகும். கடந்த ஆண்டை விட 0.53 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மேலும், சென்ற ஆண்டு மாநில அளவில் 15ஆம் இடத்திலிருந்து, இந்த ஆண்டு 14ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 163 அரசுப் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 11,626 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 10,563 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.86. கடந்த ஆண்டை விட 0.62 சதவீதம் கூடுதலாகி உள்ளது. 2 அரசு ஆதிதிராவிடநலப்பள்ளிகளைச் சார்ந்த 52 மாணவர்கள், 61 மாணவியர்கள் என 113 மொத்தம் பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 45 மாணவர்கள், 58 மாணவியர்கள் என மொத்தம் 103 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.15 ஆகும். ஒரு சமூக நலத்துறைப் பள்ளியினை சார்ந்த 9 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதினார்கள். இதில் 7 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 77.78. நாமக்கல் மாவட்டத்தில் 4 பழங்குடியினர் நலத்துறை ஜிடிஆர் பள்ளிகளை சார்ந்த 109 மாணவர்களும் 140 மாணவியர்களும் என மொத்தம் 249 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 96 மாணவர்களும், 116 மாணவிகளும் என மொத்தம் 212 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.14 ஆகும்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 92 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்த ஆண்டு 104 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட 12 பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 30 அரசு பள்ளிகள் 100 தேர்ச்சி பெற்றது. இந்த ஆண்டு 34 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் 1ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் 1 அரசு உதவிபெறும் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளது. மொத்தம் 36 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட 6 அரசு பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் பெற்றுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் தமிழ் பாடத்தில் 97.91 சதவீதம், ஆங்கில பாடத்தில் 99.61 சதவீதம், கணித பாடத்தில் 98.02 சதவீதம், அறிவியல் பாடத்தில் 97.35 சதவீதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 96.57 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News