நாமக்கல் மாவட்டத்தில் 5.42 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்...

நாமக்கல் மாவட்டத்தில் 5.42 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் இன்று துவக்கி வைத்தார்.

Update: 2023-01-09 05:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு செங்கரும்பு விநியோகிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் இன்று இந்தத் திட்டத்தை துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி துவக்க விழா முல்லை நகரில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், முல்லை நகர் நலச்சங்க தலைவர் ராணி, ராணா ஆனந்த், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில உள்ள 885 கூட்டுறவு சங்கங்கள், 4 மகளிர் சுய உதவிக்குழுக்கள், 45 நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உள்பட்டவை என மொத்தம் 935 ரேசன் கடைகள் மூலம் 5,42,756 அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் ஜனவரி 13 ஆம் தேதி வரை, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

மேலும், 675 இலங்கை வாழ் தமிழர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. அரசு ஊழியர்ளுக்கான 470 ரேசன் கார்டுகள், மற்றும் சர்க்கரை வாங்கும் 10,543 ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படமாட்டாது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு ரேசன் கடையிலும், காலையில் 125 பேருக்கும், பிற்பகலில் 125 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 250 பேர் வீதம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவை தவிர வேட்டி, சேலைகள் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகம் மூலம் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. இதனை கண்காணிக்க ஒவ்வொரு தாலுக்காவிலும் வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News