நான்கு மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் , டீசல் விலை உயர்வு

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன.

Update: 2022-08-03 01:15 GMT

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள், சர்வதேச விலை நிலவரத்துக்கு இணையாக, தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் கடும் கொரோனா தொற்று பரவல் காலத்திலும். அரசு விடுமுறை நாட்களிலும், அடிக்கடி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்களும், வணிகர்களும், லாரி, பஸ், கார், ஆட்டோ உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்.6ம் தேதிக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக பெட்ரோல் டீசல் விலை மீதான மத்திய அரசின் வரி குறைறக்கப்பட்டதால், அதன் விலை குறைந்தது.

கடந்த ஏப்.6ம் தேதி ஒருலிட்டர் பெட்ரோல் விலை ரூ.111.48 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் விலை ரூ.115.79 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.101.59 ஆகவும் இருந்தது. விலை குறைவுக்குப்பின் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.27 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் ரூ.108.62 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94.88 ஆகவும் கடந்த 4 மாதங்களாக விலை மாறுதல் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9 பைசா உயர்த்தப்பட்டு ரூ.103.36 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.108.72 ஆகவும், டீசல் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.94.98 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News