பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, அலங்காநத்தம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

Update: 2023-09-12 01:00 GMT

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக அலங்காநத்தம் கிராம மக்கள் வந்திருந்தனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், அலங்காநத்தம் கிராம மக்கள், இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

சேந்தமங்கலம் தாலுக்கா, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அலங்காநத்தம் கிராமம், ராஜவீதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் பட்டா நிலம் எனக் கூறி ஆக்கிரமிப்பு செய்து பாதையை அடைத்துள்ளார்.

பாதை வசதியில்லாததால், பொதுமக்கள் அனைவரும் அங்குள்ள ஆற்றை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது அவ்வழியாக செல்ல முடியவில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் பள்ளி செல்ல முடியாததுடன், பொதுமக்களுக்கும் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுமக்களுக்காக பாதை வசதி செய்து தரவேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே 4 முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இம்முறையாவது ஆக்கிரமிப்பை அகற்றி பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags:    

Similar News