தமிழகத்தில் 4,200 மருத்துவ பணியிடம் நிரப்புவதற்கு விரைவில் அறிவிப்பு: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 4,200 மருத்துவ பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அமைச்சர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், மலைப் பகுதிகளில் உள்ள, 26 ஆயிரத்து 972 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 2,297 பேருக்கு ஹீமோகுளோபினாபதி நோய் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமாரி, திருச்சி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள, கர்ப்பிணி தாய்மார்கள் 32 ஆயிரத்து 225 பேருக்கு பரிசோதனை செய்ததில், 2,165 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பெண்கள், ஆண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதில், பெண்களை பொருத்தவரை, 54 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களில் 26 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் இருப்பது தெரியவந்துள்ளது.சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகள் தயாரிக்கும் தமிழக அரசின் டாம்கால் என்கிற, தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. அதன், இரண்டாவது யூனிட், கொல்லிமலையில் அமைய வேண்டும் என கோரிக்கை உள்ளது. அதற்காக, 25 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இது குறித்து, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இடம் கிடைத்ததும், தமிழக முதல்வரின் அனுமதி பெற்று, அடுத்த நிதி ஆண்டில், டாம்கால் இரண்டாம் யூனிட் கொல்லிமலையில் அமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடி, நாய்க்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்கும் வகையில் மருந்துகள் இருப்பில் உள்ளன.தமிழகத்தில், மருத்துவத்துறையில் கடந்த ஆண்டு, 4,308 காலிப்பணியிடங்கள் இருந்தன. அதில், 2,500க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு, தமிழக முதல்வர் பணி நியமன உத்தரவுகளை வழங்கி உள்ளார். தற்போது, 1,021 மருத்துவ பணியிடங்கள், 980 மருந்தாளுனர் பணியிடங்கலுக்கு தேர்வு நடந்துள்ளது. விரைவில் பணி நியமனம் வழங்கப்படும். அதேபோல், இந்த நிதி ஆண்டில், புதிதாக 4,200 மருத்துவ பணியிடங்கள் நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில், தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் இதற்கான தேர்வு அறிவிப்பை வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.