வடமாநில லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: போலீஸ் விசாரணை

நாமக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-10-18 02:30 GMT

பைல் படம்.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் சோனு மகந்தி (30). லாரி டிரைவர். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு புதிய லாரி சேசிஸ் ஓட்டி வந்தார். இரவு 10 மணியளவில், அந்த லாரியை வள்ளிபுரத்தில் நிறுத்தி விட்டு, கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர்களை பார்க்க செல்வதற்காக சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தார். அப்போது பரமத்திவேலூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினிலாரியை நிறுத்துமாறு சைகை காட்டினார்.

இதையடுத்து அந்த மினி லாரியை அதன் டிரைவர் நிறுத்தினார். அப்போது அதில் 3 பேர் அமர்ந்து பயணம் செய்தனர். அவர்கள், நாங்கள் பெங்களூர் போகிறோம். நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என கேட்டனர். அதற்கு சோனு மகந்தி 10 கி.மீட்டர் தூரம் உள்ள கருங்கல்பாளையம் செல்ல வேண்டும். ரூ.50 தருகிறேன் ஏற்றி செல்லுங்கள் என கேட்டு உள்ளார். அதற்கு மினிலாரியில் வந்த நபர்கள் சம்மதம் தெரிவிக்கவே, சோனு மகந்தியும் லாரியின் கேபினில் ஏறிக் கொண்டார்.

போகும் வழியில் மினிலாரியில் இருந்த மர்ம நபர்கள் சோனு மகந்தியை மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம் மெற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பிடுங்கிக் கொண்டு, அவரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, லாரியில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்று விட்டனர்.

இச்சம்பவத்தில் தலையில் காயம் அடைந்த சோனு மகந்தி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News