நிவாரணம் கிடைக்கவில்லை: நீதிமன்றத்தில் விவசாயி மீண்டும் மனு

ஆட்சியர் அலுவலர வாகனத்தை ஜப்தி செய்து 6 மாதம் ஆகியும் இழப்பீடு தராததால் காரை ஏலம் விடக்கோரி விவசாயி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

Update: 2023-03-28 02:00 GMT

பைல் படம்

கலெக்டர் அலுவலக காரை ஜப்தி செய்து 6 மாதங்கள் ஆகியும், விவசாயிக்கு நிலத்திற்கான இழப்பீடு வழங்காததால், காரை ஏலம் விட வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் கடந்த 1993-ம் ஆண்டு பேளுக்குறிச்சியை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் (83) என்பவரிடம் இருந்து, ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வீடு கட்டுவதற்காக 1 ஏக்கர் 76.5 சென்ட் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்கு ஏக்கர் கணக்கில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு, ஆறுதல் தொகையுடன் சேர்த்து ரூ. 2 லட்சத்து 48 ஆயிரத்து 434 வழங்கப்பட்டது.

இந்த தொகை போதுமானதாக இல்லை என்றும், சதுர அடி கணக்கில் இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் எனவும் ராமலிங்கம் தரப்பில் நாமக்கல் சப்-ஜட்ஜ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  சார்பு நீதிமன்ற  நீதிபதி, ராமலிங்கத்திற்கு சதுர அடிக்கு ரூ.25 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவுபடி ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், விவசாயி ராமலிங்கத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து ராமலிங்கம் தரப்பில் தங்களுக்கு வட்டியுடன் சேர்த்து வர வேண்டிய பாக்கி தொகை ரூ.1 கோடியே 42 லட்சத்து 87 ஆயிரத்து 328-ஐ பெற்று தருமாறு, நீதிமன்றத்தில்  நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சார்பு நீதிபதி, நாமக்கல் ஆட்சியர்  அலுவலக பயன்பாட்டில் உள்ள 2 கார்கள் மற்றும் தளவாட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

இதன் தொடர்ச்சியாக நீதிமன்ற  அமினாவுடன் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் ஆட்சியர்  அலுவலகம் வந்த ராமலிங்கம்,  அலுவலக பயன்பாட்டில் உள்ள ஒரு காரை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு  எடுத்து செல்ல முயன்றார். ஆனால் டிரைவர் யார் என்று தெரியாத காரணத்தாலும், சாவி கிடைக்காததாலும் காரின் பின் புற கண்ணாடியில் நீதிமன்ற உத்தரவு நகலை ஒட்டி விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.

இதற்கிடையே அந்த கார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ஜப்தி செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் ஆகியும் இழப்பீட்டு தொகை கிடைக்காததால், காரை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமலிங்கம் தரப்பில் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இழப்பீடு வழங்காததால் ஆட்சியர் அலுவலக வாகனம் ஜப்தி செய்து ஆறு மாதங்கள் கடந்த பிறகும் பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்ற உத்தரவுபடி இழப்பீடு வழங்காமல் அலைக்கழிக்கும் நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News